மக்களை திக்குமுக்காட வைத்த திண்டுக்கல் அரசு பேருந்து...சீன மொழியில் டிஜிட்டல் பலகை..!
By : Sushmitha
திண்டுக்கல் அரசு பேருந்து நிலையத்தில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் செல்கிறது. இந்த அரசு பேருந்துகளில் உள்ள பலகைகள் அனைத்தும் டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பேருந்து செல்லும் ஊர் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்கின்ற அரசு பேருந்தின் பின் புறத்தில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகையில் வழக்கத்தை விட வேறு ஒரு மொழியில் பேருந்து செல்ல வேண்டிய ஊர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மொழி தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு சிலர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பேருந்து செல்கின்ற ஊர் பெயரைக் கேட்டு ஏறி பயணித்தனர். இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்று ஏற்பட்டுள்ளதாலும் டிஜிட்டல் ப்ரோக்ராமிங்கை மாற்றி அமைத்தால் இயல்பு நிலைக்கு வந்து விடும் என்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமரை வரவேற்க திமுக சார்பில் சீன கொடியுடன் கூடிய விளம்பரம் வெளியானது பல விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar