பிரதமர் மோடியை சிறுமைபடுத்தி சென்னை கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தியின் பொய் பேச்சு - தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க இளைஞரணி புகார் - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கல்வித்துறை!
பிரதமர் மோடியை சிறுமைபடுத்தி சென்னை கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தியின் பொய் பேச்சு - தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க இளைஞரணி புகார் - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கல்வித்துறை!
By : Kathir Webdesk
நேற்று முன் தினம்(மார்ச் 13) சென்னை வந்திருந்த ராகுல் காந்தி கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி அரசியல் தொடர்பான நிகழ்ச்சி அல்ல என்றாலும் அந்த கல்லூரியை நடத்தும் கிறிஸ்தவ நிர்வாகம் பிரதமர் மோடியை சிறுமை படுத்தவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சியை அரசியல் படுத்தியது. மாணவிகளை தூண்டி சில கேள்விகளை முன்பே ஏற்பாடு செய்து, அதற்கேற்றவாறு இராகுல் காந்தியும் பதில்களை தயாரித்து பேசும் விதமாக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
மாணவிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளில் மோடியின் பெயரை மறைமுகமாக வம்புக்கு இழுக்கும் வகையில் இருந்தன. இராகுலும் ஒவ்வொரு பதிலிலும் மோடியை சிறுமை படுத்தி தாக்குவதிலேயே குறியாக இருந்தார். அவர் மோடியை தாக்கி பேசும்போது மாணவிகள் எழுப்பிய கரகோஷம், கைதட்டல்களை பார்க்கும் போது இது அந்த நிர்வாகத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்தது. அதே சமயம் பா.ஜ.க-வினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு கல்வி நிலைய வளாகத்தில் அரசியல் மற்றும் மதத்துக்கு அப்பாற்பட்டு கல்வி கற்க வந்திருக்கும் மாணவிகளைக் கொண்டு ஒரு நாட்டின் பிரதமருக்கு எதிராக மற்றொரு அரசியல் தலைவரை பேசவைப்பது, அதற்கு இடம் கொடுத்தது எப்படி என்ற கேள்வி தமிழக பா.ஜ.க இளைஞரணி மத்தியில் ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடம் ராகுல் உரையாற்றும் போது பலதவறான தகவல்களை பரப்பியதாக, தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க இளைஞரணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தை அரசியல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி அமலில் உள்ள போது, தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவர்களை ஒன்று திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார் ராகுல், கல்லூரி நிர்வாகமும் விதியை மீறி செயல்பட்டு உள்ளது.
மேலும், ராகுல் தனது உரையின் போது, அடிப்படை முகாந்திரம் கூட இல்லாத பல விஷயத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து உள்ளார். குறிப்பாக ரபேல் வழக்கு நிலுவையில் உள்ளபோது, இதில் பிரதமரின் பங்கீடு நேரடியாக உள்ளது என ஆதாரமின்றி மாணவர்கள் மத்தியில் பேசி உள்ளார். எனவே தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் நடந்துகொள்ளும் ராகுல் காந்தி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் மனுவினை தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தேர்தல் ஆணையரிடம் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில், இந்நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர் ஒருவர் பங்கேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை விசாரித்து உடனடியாக அறிக்கை அனுப்பி தருமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.