தெறிக்கவிட்ட கோவை .........'மீண்டும் மோடி... வேண்டும் மோடி!':
தெறிக்கவிட்ட கோவை .........'மீண்டும் மோடி... வேண்டும் மோடி!':
By : Kathir Webdesk
கோவையில், நேற்று முன்தினம் ஒரு மணி நேரமே தங்கியிருந்தார் மோடி; அதுவும், 37 நிமிடங்களே பேசினார். அதில், எவ்வளவு தொலைநோக்கு பார்வையோடு இருக்க வேண்டும் என்பதுடன், தங்கள் பலம், துணிச்சலை சுட்டிக்காட்டியதோடு, கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனைகளை, பிரதமர் பட்டியலிட்டார். அவரது பேச்சில் கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சங்கள் பலவும் இருக்கின்றன
தொழில்துறையினரின் அதிருப்தியை குறைக்கும் வகையில், 'ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்தி வருகிறோம்; உங்களது பிரச்னைகள் புரிகிறது; விரைவில் சரி செய்வோம்; ஆலோசனைகளையும் ஏற்கிறோம்' என்று உறுதியளித்த அவர், நடுநிலையாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில், 'நதிநீர் இணைப்பு திட்டம் மட்டுமின்றி, தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்' என, காவிரி நதி நீர் பங்கீட்டுக்கு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அடித்தளமிட்டு இருக்கிறார்.
முதல்நாள் பள்ளிக்கு சென்றது; முதல் மாதம் சம்பளம் வாங்கியதை யாராலும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது; முதல் நாள் சம்பளத்தை நல்ல விஷயத்துக்காக செலவிடுவது வழக்கம். அதேபோல், இளம் வாக்காளர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக, உங்களது முதல் ஓட்டு பதிவு செய்யுங்கள்' என்றார் மோடி. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், பெண்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அடுக்கினார். மகளிரையும், புது வாக்காளர்களையும் சிந்திக்கச் சொல்லிச் சென்றுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது தமிழகம் என்ற மோடி, 'அதற்காகவே, ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் மையங்களை இங்கு அமைக்கிறோம்; அவை உருவாகும்போது, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என்றார். அனைவருக்கும் வங்கி கணக்கு, கிராமங்களுக்கு மின் வசதி, அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம், மகளிருக்கு காஸ் இணைப்பு, பேறுகால விடுப்பு, தொழில்துறையினருக்கு, 'முத்ரா' கடனுதவி திட்டம் என, சாதித்துக் காட்டியவற்றை பட்டியலிட்டதோடு, சாதிக்க முடியாத விஷயங்களையும் சாதித்துக் காட்டக்கூடிய கூட்டணி, இது என, பெருமிதப்பட்டார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, மறைந்த அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெ., ஆகியோர் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போது, தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படும்; உணர்ச்சிகளை துாண்டி விடுவர். கூட்டத்தில், தொண்டர்கள் ஆர்ப்பரிப்பர்; ஆரவாரம் செய்வர். அவர்கள் பேசிச் சென்றதும், தொண்டர்களுக்கு புதுதெம்பு கூடும். அத்தகைய எழுச்சியை மோடி பங்கேற்ற கூட்டத்தில் பார்க்க முடிந்தது; சலசலப்பு இல்லை. அதேநேரம், அவரது சூளுரையை கேட்டு, தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.'தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம்' என, தமிழில் பேச்சை துவக்கியபோது, உணர்ச்சி பீறிட்டது; 'மருதமலை முருகனுக்கு அரோகரா' என, சென்டிமென்ட்டாக, 'டச்' செய்ததும், 'மீண்டும் மோடி… வேண்டும் மோடி' என, கோஷமிட்டனர்,
தொண்டர்கள்.
கோவை மண்ணில் நின்று பேசியதாலோ, என்னவோ, குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவுபடுத்தியோடு, அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது, காங்., - தி.மு.க., கூட்டணி என்பதை நினைவுபடுத்திய அவர், 'இப்போது யாரும் வாலாட்ட முடியாது; வட்டியும் முதலுமாக திருப்பித் தருவோம்' என்று துணிச்சலாக சூளுரைத்ததோடு, இப்பொழுது நாடு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை, அனைவருக்கும் உணர்த்தினார். ஆன்மிக பக்தர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும், கம்யூ., - காங்., செயல்பாடுகளை எடுத்துரைக்க, சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை கோடிட்டுக் காட்டினார்.