Kathir News
Begin typing your search above and press return to search.

திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் அரங்கேற்றும் - காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கும் புள்ளிவிவரங்கள்..!

திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் அரங்கேற்றும் - காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கும் புள்ளிவிவரங்கள்..!

திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் அரங்கேற்றும் - காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கும் புள்ளிவிவரங்கள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 May 2019 12:36 PM GMT


இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலம் இன்று அவர்களின் பிடியிலிருந்து நழுவிவிட்டது. அது மட்டுமல்லாமல், மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரத்துக்கும் அரசியல் பகைமைக்கும் ஈடு கொடுக்க முடியாமல், மத்தியில் ஆளும் பாஜக பக்கம் மேற்கு வங்கத்தின் இடதுசாரிகள் மெதுவாக சாய்ந்து வருகின்றனர்.
இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிப்பதாக தினமணி செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.


மேற்கு வங்கத்தை 1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி இன்று தனது வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் சிறுகச் சிறுக இழந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இழப்பு, பாஜகவுக்கு சாதகமாக மாறி வருவதைக் கண்டு அக்கட்சியின் தலைவர்கள் திகைக்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையில் புத்துணர்வுடன் களமிறங்கும் பாஜகவில் சிபிஎம் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இணைந்து வருகின்றனர். ஜோதிபாசு முதல்வராக இருந்த வரை (1977- 2000) சிபிஎம் வலுவான கட்சியாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே செயல்பட முடியாத நிலையும் நிலவியது.


மார்க்சிஸ்ட் அராஜகங்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்பதே அக்கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி வெளியேறி தனிக்கட்சி துவங்கவும் காரணமானது.2000 முதல் 2011 வரை முதல்வராக இருந்த புத்ததேவ் ஆட்சிக் காலத்தில்தான், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்குள்ள தலைவியாக உருவெடுத்தார். அதற்கு பாஜகவும் உதவியது. ஜோதிபாசு 2010-இல் காலமானார். இடதுசாரிக் கூட்டணியின் 34 ஆண்டுகால ஆட்சியால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்ததன் விளைவாக 2011-இல் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சிக்கு வந்தது; மம்தா பானர்ஜி முதல்வரானார். ஆட்சியை இழந்த இந்த 8 ஆண்டுகளில் சிபிஎம் பெருத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


2011-இல் சிபிஎம் பெற்றிருந்த வாக்கு விகிதம் 39.6 %. அது 2016 பேரவைத் தேர்தலில் 25.6 சதவீதமாகக் குறைந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி முன்னணி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருந்ததது. அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் திரிணமூல் 213 தொகுதிகளில் வென்றது. தேர்தல் உடன்பாடு மூலம் ஆதாயம் அடைந்த காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றது. இடதுசாரி முன்னணி (சிபிஎம்- 26, ஆர்எஸ்பி- 3, பார்வர்டு பிளாக்- 2, சிபிஐ-1) 32 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
அந்தத் தேர்தலில் பாஜக அணி 6 தொகுதிகளில் வென்றது. அதேசமயம், 2011-இல் 4.06 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2016-இல் 10.8 சதவீதமாக அதிகரித்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 44.9 % ஆகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 12.25 % ஆகவும் இருந்தன.
2014-இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இடதுசாரிகளின் வீழ்ச்சி தொடர்ந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 44 மக்களவைத் தொகுதிகளில் டிஎம்சி 34 தொகுதிகளை வென்றது. முந்தைய தேர்தலில் (2009) அக்கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. அதேபோல, 15 தொகுதிகளில் வென்றிருந்த சிபிஎம் 2 இடங்களை மட்டுமே தக்கவைத்தது. மாறாக 2009 தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வென்ற பாஜக 2014-இல் இரு இடங்களில் வென்றது. அப்போதே சிபிஎம்மின் பாரம்பரிய வாக்காளர்கள் பாஜக பக்கம் சாய்வது தெரியத் துவங்கியது.


அந்தத் தேர்தலில் கட்சிகளின் வாக்கு விகிதத்தில் பெருத்த மாற்றம் காணப்பட்டது. டிஎம்சி -39.05 % (2009இல் 32 %), சிபிஎம் கூட்டணி -29.7 (2009இல் 42 %), காங்கிரஸ்- 9.58 (2009இல் 13.45 %), பாஜக -17.02 (2009இல் 6.14 %) என வாக்குவிகிதங்களை கட்சிகள் பெற்றன. அந்தத் தேர்தலில் டிஎம்சியும் பாஜகவும் மட்டுமே கூடுதல் வாக்குகளைப் பெற்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் இழந்த வாக்குகளை பாஜக சுவீகரித்துக் கொண்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை மேலும் மாறியது. மாநிலத்தை ஆளும் டிஎம்சி கட்சியின் அதிரடியால் திணறும் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
டிஎம்சி கட்சியினரின் வன்முறை அரசியலை பாஜக நேரடியாக எதிர்கொள்வதால் அக்கட்சியினர் மீது மக்களின் அனுதாபமும் பெருகியது. தவிர, மம்தாவின் சிறுபான்மையினர் ஆதரவுப் போக்கால் பெரும்பான்மை இந்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில், தற்போது நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் மேலும் சரிவைச் சந்திக்க உள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.தேர்தல் களத்தில் பாஜகவுக்கு முன்னாள் மார்க்சிஸ்ட் தோழர்கள் உறுதுணையாகி இருந்து வருகிறார்கள். உதாரணமாக வடக்கு கொல்கத்தா தொகுதியில் டிஎம்சி வேட்பாளரான சுதீப் பந்தோபாத்யாயவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் சின்ஹாவின் பிரசார அணியில் முன்னாள் கம்யூனிஸ்டுகள் பலரைக் காண முடிகிறது.


அந்தத் தொகுதியில் பாஜகவுக்கு உதவியாக முன்னாள் இடதுசாரிகள் செயல்படுவதைக் கண்டு பத்திரிகையாளர்கள் வியந்தனர்.
சிபிஎம்மின் தீவிர விசுவாசியான தபன் பிஸ்வாஸ் என்ற தொண்டர் டம்டம் தொகுதியில் பாஜக வேட்பாளர் செளமிக் பட்டாச்சார்யாவுக்கு வாக்கு சேகரிக்கிறார். அவரைப் பொருத்த வரை, தேர்தல் களத்தில் தனது அரசியல் எதிரியை வெல்லும் பலம் சிபிஎம்முக்கு இல்லை; அந்த இடத்தை பாஜக நிரப்புகையில் அதை ஆதரிப்பது தவறல்ல.


சிபிஎம் காலாவதியான கட்சியாகிவிட்டது. அக்கட்சிக்குக் கூடும் மக்கள் கூட்டம் மிகக் குறைவு.
இதேபோன்ற காட்சிகளை மேற்கு வங்க மாநிலம் நெடுகக் காண முடிகிறது. சிவப்புக் கொடியேந்தி கோஷமிட்ட தொண்டர்கள் பலரும் காவிக்கொடியுடன் மம்தாவை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த வித்யாசமான காட்சியே அரசியல் செல்லும் திசையைக் காட்டுகிறது.


ஹபீப்பூர் பேரவைத் தொகுதியில் சிபிஎம் எம்எல்ஏவாக இருந்த காகென் முர்மு கடந்த மார்ச் மாதம் பாஜகவுக்கு மாறிவிட்டார். தற்போது அவர் வடக்கு மால்டா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இயக்க ரீதியாகவும் மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றிருந்த இடத்தைக் கைப்பற்ற பாஜக முனைகிறது. மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் திராணி பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாக டிஎம்சியின் அரசியல் எதிரிகள் கருதுவதால், பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் மேற்கு வங்கம் முழுதும் பிரபலமான தலைவராகி விட்டார். திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் பாஜக அரங்கேற்றும் என்று பரவலாக பேசப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News