மோடி ராஜ்ஜியத்தில் அமைச்சரவை எவ்வாறு இருக்கும்? புதிய முகங்கள் இடம் பெறுமா?
மோடி ராஜ்ஜியத்தில் அமைச்சரவை எவ்வாறு இருக்கும்? புதிய முகங்கள் இடம் பெறுமா?
By : Kathir Webdesk
பிரமாண்ட வெற்றியுடன் 2வது முறை பிரதமராகும் மோடி தலைமையிலான ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் புதிதாக பலர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இவருக்கு உள்துறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ரயில்வே அமைச்சராக இருக்கும் பியூஷ்கோயல் நிதி அமைச்சர் பொறுப்பை பெறுவார். மேலும் உமாபாரதி இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது. இது போல் சுஷ்மாவும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.
அமித்ஷா மத்திய அமைச்சர் பொறுப்பு பெற்றால் தலைவர் பதவி பொறுப்பு மாற்று நபருக்கு வழங்கப்படும். ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இராணிக்கு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக வாய்ப்புள்ளது. ஏற்கனவே கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்பட்டவர் என பெயர் பெற்ற நிதின்கட்காரிக்கு இம்முறை கூடுதலாக முக்கிய இலாக்கா ஒதுக்கப்படும்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்த்ரராஜே, பா.ஜ., பொதுச்செயலர் ராம்மாதவ், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஆகியோருக்கும் மத்திய காபினட் அந்தஸ்து காத்திருப்பதாக பா.ஜ.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சபாநாயாகராக இருந்த சுமித்ரா மகாஜன் இந்த முறை போட்டியிடாததால், இவருக்கு பதிலாக புதிய சபாநாயகர் யார் என்பது ரகசியமாகவே உள்ளது. இது போல் பிரதமருக்கான முதன்மை செயலர் நிர்பேந்திர மிஷ்ராவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் காபினட் செயலராக இருக்கும் பி.கே.சின்கா அல்லது டில்லி துணைநிலை ஆளுநர் அணில்பைஜால் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படுவர் என தெரிகிறது.