இரண்டு நாட்களாக ட்ரெண்டாகும் #SRMcollegesuicudes : கண்டு கொள்ளாத ஊடகங்களும், அரசியல் கட்சிகளும்
இரண்டு நாட்களாக ட்ரெண்டாகும் #SRMcollegesuicudes : கண்டு கொள்ளாத ஊடகங்களும், அரசியல் கட்சிகளும்
By : Kathir Webdesk
செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு, 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனுஷ் செளத்ரி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறகு, பொன்னேரியை சேர்ந்த பிடெக் 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, கல்லூரியின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர் வலைப்பக்கத்தில் #SRMcollegesuicudes என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது. இந்த தற்கொலை செய்திகளை மறைக்க தான் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேகை தமிழக பத்திரிகையாளர்கள் ட்ரெண்ட் செய்தனரா என்ற கேள்வியையும் ட்விட்டர் வாசிகள் முன் வைத்து வந்தனர். மாணவர்களின் தற்கொலைக்கு நீதி தேவை எனவும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர்களுக்காக மொத்த இணையவாசிகளும் ஒன்றிணைந்த சம்பவம் கல்லூரி மாணவர்களை நெகிழ வைத்துள்ளது. ஒரே வாரத்தில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த செய்திகளை ஊடகங்கள் புறக்கணிப்பது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் திரு H. ராஜா கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை நடத்துபவர், தி.மு.க சார்பில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தற்கொலைகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊடகங்கள் ஒரு புறம் இந்த செய்தியை புறக்கணிக்க, அரசியல் கட்சிகளும் மறு புறம், உரிய விசாரணை குறித்து கோரிக்கை வைக்காதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.