“திமுகவில்தான் இரட்டைத் தலைமை உள்ளது” - ராதாரவி அதிரடி!!
“திமுகவில்தான் இரட்டைத் தலைமை உள்ளது” - ராதாரவி அதிரடி!!
By : Kathir Webdesk
தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி குணச்சித்ர நடிகராக வலம் வருபவர் ராதாரவி. இவர் முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலவி ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராதாரவி, மா.சுபரமணியத்தைத் தோற்கடித்தார்.
நீண்டகாலமாக அதிமுகவில் இருந்த அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினையில் திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்கூட கேட்காமல், ராதாரவியை சஸ்பெண்ட் செய்ததார். உடனே ராதாரவி திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்து முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு நிருபர்களுக்கு ராதாரவி பேட்டியளித்தால். அப்போது அவர் கூறியதாவது: -
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் நன்றி. என்னை இணைக்க முயற்சித்த கடம்பூர் ராஜுவுக்கும் நன்றி. ஜேகே ரித்தீஷ் என்னை இணைக்கப் பெரிதும் முயன்றார். ஆனால் அவர் இன்று இல்லை.
ஸ்டாலின் செய்தது நியாயமா? அநியாயமா? என்பது எனக்குத் தெரியாது. அது சினிமா விழா, அதில் நான் பேசியிருக்கிறேன். அந்த நடிகையை தரக்குறைவாகப் பேசவில்லை. அப்படி மனதைப் பாதித்ததாக இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன். அதன் பிறகும் நீக்கப்பட்டேன். அதன் பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன். யார் யாருக்கு உறவு என்று தெரிந்து பேச வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
நான் நடிகர் சங்கத் தேர்தலுக்காக பாக்யராஜ் அணியை ஆதரித்து நாடக நடிகர்களிடம் பேசியபோது, ராதாரவியை ஆதரிக்கக்கூடாது என்று திமுக தலைமையிலிருந்து பேசியதாக அறிந்தேன். நடிகர் சங்கத்திலிருந்து இதில் நுழைந்ததால் என்னை ஒதுக்கியதை அறிந்தேன். அதனால் யோசித்து அதிமுகவில் இணைய முடிவெடுத்தேன்.
திமுகவின் தலையீடு நடிகர் சங்கத் தேர்தலில் நிச்சயம் உள்ளது. நடிகர் சங்கத் தேர்தலிலேயே இது இருக்கும்போது, இனி திமுகவில் நீடிப்பதை பற்றி பரிசீலித்துதான் முடிவு செய்தேன். ஸ்டாலினை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவருக்கு இது தெரியுமோ தெரியாதா எனக்குத் தெரியாது.
உண்மையில் இரட்டைத் தலைமை திமுகவில்தான் உள்ளது. ஆனால், அதை நான் சொல்லமாட்டேன். நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதிமுகவுக்கு வந்துவிட்டேன். இது எனக்குப் புதிதல்ல. நான் 18 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். ஸ்டாலினுக்காக மட்டும்தான் திமுகவில் இணைந்தேன். என்ன நடந்தது என ஸ்டாலின் என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம்.
அதிமுகவில் இணைவதென்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் முடிவு செய்தேன். நில அபகரிப்பு தொடர்பான வழக்கை எதிர்கொள்வேன். என்னை நடிகர் சங்கத்தில் இணைக்காமல் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது.
இவ்வாறு ராதாரவி கூறினார்.