திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தென்காசி கோழிப்பண்ணை உரிமையாளர் கைது! சென்னை கொண்டு வரப்பட்டார்!!
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தென்காசி கோழிப்பண்ணை உரிமையாளர் கைது! சென்னை கொண்டு வரப்பட்டார்!!
By : Kathir Webdesk
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தென்காசி கோழிப்பண்ணை உரிமையாளரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 - ஆம் தேதி கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடித்து 253 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கடந்த இரு மாதங்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் கடந்த பிப்வரி மாதம் கொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரைக்கால், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த 25 - ஆம் தேதி நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவரும் கோழிப்பண்ணை உரிமையாளருமான முகைதீன் சாலிஸ் என்ற அகமது சாலிக்கை (48) என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
கொச்சியில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருபுவனத்தில் முஸ்லிம் மதம் மாற்ற பிரசாரங்களில் அகமது சாலிக் ஈடுபட்ட போது, அவருக்கும் ராமலிங்கத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். கொலைக்கு முன்பும், பின்பும் அகமது சாலிக்கின் வாட்ஸ்அப் தகவல் மற்றும் செல்போன் உரையாடல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டினர்.
இதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அகமதுசாலிக்கை கைது செய்து என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேல் விசாரணைக்கு நேற்றிரவு (27 - ஆம் தேதி) பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் வந்தனர். இங்கு அவரிடம் இன்று என்.ஐ.ஏ. மற்றும் தமிழக உளவு துறையினர் விசாரணை நடத்தினர்.