பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது: பனி லிங்கத்தை தரிசிக்க 4417 பேர் 2 குழுக்களாக புறப்பட்டனர் !!
பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது: பனி லிங்கத்தை தரிசிக்க 4417 பேர் 2 குழுக்களாக புறப்பட்டனர் !!
By : Kathir Webdesk
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை தொடங்கியது. இமயமலையில் உள்ள குகைக் கோவிலில் இருக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் அமர்நாத் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு46 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் வந்த உள்துறை மந்திரி அமித்ஷா, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். இதன்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை தொடங்கியது. பல்டால் முகாமில் இருந்து துவங்கிய யாத்திரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அமர்நாத் யாத்திரையின் முதல் குழுவில் 1617யாத்ரீகர்கள் சென்றுள்ளனர்.
இதில் 1174 ஆண்கள்.379 பெண்கள், 15 குழந்தைகள் மற்றும் 49 முனிவர்கள் பால்டால் வழியாக சென்றுள்ளனர். மேலும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பகல்காம் வழியாக 2800 யாத்ரீகர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 2321 பேர் ஆண்கள் ,479பெண்கள் மற்றும் 16 குழந்தைகள் சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது