Kathir News
Begin typing your search above and press return to search.

இன்றைய பாஜகவின் அன்றைய பிதாமகன், மாபெருந்தலைவர் ஷியாமபிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் இன்று ! நாடு முழுவதும் தொண்டர்கள் விழாக் கொண்டாட்டம் !!

இன்றைய பாஜகவின் அன்றைய பிதாமகன், மாபெருந்தலைவர் ஷியாமபிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் இன்று ! நாடு முழுவதும் தொண்டர்கள் விழாக் கொண்டாட்டம் !!

இன்றைய பாஜகவின் அன்றைய பிதாமகன், மாபெருந்தலைவர் ஷியாமபிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் இன்று ! நாடு முழுவதும் தொண்டர்கள் விழாக் கொண்டாட்டம் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2019 7:34 AM GMT



பாரதீய ஜனதா கட்சியின் தாய் கட்சியான ஜன சங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி. அவருடைய பிறந்த நாள் இன்று. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முகர்ஜி அவர்களை நினைவு கூர்ந்தார். அவர் குறித்து கூறுகையில் ‘இந்தியாவின் ஒற்றுமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஷியாம பிரசாத் முகர்ஜி. வலிமையான மற்றும் ஒன்றிணைந்த இந்தியா மீதான அவரது ஆர்வம் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவரது எண்ணங்கள் கல்வி, நிதி, வளர்ச்சி ஆகியவற்றில் சங்கமித்து இருந்தன. அவர் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அவரது பார்வை தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என புகழாரம் சூட்டினார் மேலும்130 கோடி இந்தியர்களுக்கு சேவையாற்றும் வலிமையையும் எங்களுக்கு தருகிறது’ என்றும் கூறியுள்ளார்.





இந்த நிலையில் இன்றைய பாஜக கட்சியின் தாய் நிறுவனமான ஜன சங்கத்தை தோற்றுவித்து மகத்தான தேசிய தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும், தலை சிறந்த தேச குடிமகன்கள் உருவாகவும் காரணமாக இருந்த ஷியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரின் தோற்றம், வளர்ச்சி, தியாகம், பணிகள் குறித்து பார்ப்பது நல்லது.


ஷியாமா பிரசாத் முகர்ஜி 1901 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் தேதியன்று பிறந்தார். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது. இன்று 45 கோடி தொண்டர்களை கொண்ட பிரம்மாண்டமான கட்சியாக வளர்ந்ததுடன், பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்று கடந்த 2 தடவையாக ஆட்சியமைத்துள்ளது பாஜக. இந்த நிலைக்கு கட்சி உயரக் காரணம் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களே காரணம். அவர் தந்த சிந்தனைகளின் ஊக்கமும், உத்வேகமும் தான் அத்வானி, வாஜ்பேயி, மோடி உட்பட நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்கித்தந்தது. அவர் கட்சி தொடங்கியது மற்றும் தொடங்கிய 2 மாதங்களிலேயே 3 மக்களவை தொகுதிகளை வென்று தேசிய கட்சியாக உருபெற்ற வைத்தது ஆகிய வரலாற்றை காணலாம்.


பிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச் சென்ற பின் நேரு பிரதமரானார். அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர். இத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர்.


படேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது. நேரு-லியாகத் அலி உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள் துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப் பொறுமை இழக்க வைத்தது.


அவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம் நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..


அதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம் தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப் பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி டில்லி நகர வாசிகள் அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர்.


தனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கிரசுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறியது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆர் எஸ் எஸ் ன் இயக்க ரீதியான அமைப்பையும் ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார். ஆனால் எந்தப் பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார்.


அவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு ‘இந்திய மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது. முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை தொடர்பு படுத்தி அதைத் தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.


ஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக் கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத் தலைவராகவும் , பால்ராஜ் மதோக் அவர்கள் தேசியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


கட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது தாக்குதலுக்கு இலக்காக்கினார். இது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத் தொகுதிகளை வென்றதுடன் 3 சதவிகித வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.


ஜன சங்கத்தின் தேசியக் கட்சி என்ற தகுதியும், மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் முகர்ஜி அவர்களின் வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே காங்கிரசுக்கு மிகச் சரியான மாற்றாக மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம் அமைந்த வரலாறாகும்.


ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார். முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக மாறியது. இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும் , ஜே.பி இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.


1984 மக்களவைத் தேர்தலில் பா ஜ கவுக்கு 3 இடங்களே கிடைத்தன. அத்வானி அவர்கள் கட்சியின் தலைவரானார்.


1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா ஜ க 85 தொகுதிகளில் வென்றது. 1991ல் அது 119 ஆக உயர்ந்தது. 1996ல் பா ஜ க மிக அதிக பட்சமாக 187 தொகுதிகளை வென்றது .


அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார் பிறகு 1998 ல் மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை அ தி முக ஆதரவை விலக்கிக் கொண்டதால் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 1999 ல் பா ஜ கவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசமைத்தது. இம்முறை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


2014 மக்களவைத் தேர்தல் பா ஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2019 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றிப் பெற்று மத்தியில் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. நாளை நமதே….நாளை மறுநாளும் நமதே என்ற இலக்குடன் மக்களுக்கு ஷியாமபிரசாத் முகர்ஜி வழியில் அவரின் பிறந்த நாளில் சபதமேற்று கடமை ஆற்றுவோம். இன்று அந்த மாபெரும் தலைவனின் பிறந்த நாளை நாடு முழுவதும் பட்டி, தொட்டி எங்கும் அறுசுவை அன்னதானங்கள் வழங்கி தொண்டர்கள் ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News