டி.கே.சிவகுமார் பெயரில் 317 வங்கி கணக்குகள்! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை!!
டி.கே.சிவகுமார் பெயரில் 317 வங்கி கணக்குகள்! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை!!
By : Kathir Webdesk
காங்கிரஸ் மூத்த தவைர்களில் ஒருவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில் 317 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றை கண்டுபிடித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
டி.கே. சிவகுமார், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், 3-ஆம் தேதி, அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை, ஒன்பது நாள் காவலில் எடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவரது காவல் நேற்று முடிந்ததையடுத்து, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, “சிவகுமார், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரது காவலை மேலும், ஐந்து நாட்கள் நீட்டிக்க வேண்டும்” என்று அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிவகுமாரின் காவலை, செப்டம்பர் - 17 வரை நீட்டித்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சிவகுமார் மகளிடம், நேற்று முன்தினம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் கூறியதாவது:-
கர்நாடகாவில், சிவக்குமார், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது, பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்துடன் சேர்த்து ரூ.200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
சிவக்குமார், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயரில், 20 வங்கிகளில் 317 வங்கிக்கணக்குகள் செயல்படுகின்றன. அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அசையா சொத்துகள் உள்ளன. அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் நடந்த விசாரணையின் போது, அவர் முறைகேடாக ரூ.108 கோடி பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது,
சிவக்குமார் பெயரில் ரூ.800 கோடி அளவுக்கு பினாமி சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.