இப்படி பேசினா தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்படி வளரும்? பா.ஜ.க துணைத்தலைவர் அரச குமாருக்கு எதிராக பா.ஜ.க-வினர் போர்க்கொடி!
இப்படி பேசினா தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்படி வளரும்? பா.ஜ.க துணைத்தலைவர் அரச குமாருக்கு எதிராக பா.ஜ.க-வினர் போர்க்கொடி!
By : Kathir Webdesk
புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழாவில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அரசகுமார் இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை, ஜனநாயக முறைப்படி அல்லாமல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்திருந்தால் கூவத்தூரில் விஷயம் நடந்த போது அவர் முதலமைச்சராக இருப்பார் என்று அவர் தெரிவித்தார், ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார். காலம் கணியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார். தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்" என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரச குமார் இப்படி பேசியிருப்பது பா.ஜ.க தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவரே இப்படி இருந்தால் தாமரை எப்படி தமிழ்நாட்டில் வளரும் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க துணைத் தலைவர் அரச குமாருக்கு கண்டனங்கள் எழுகின்றன. அரசு குமாருக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அடிப்படை உறுப்பினராக இருந்த அவரை நீக்க வேண்டும் என பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க செய்தித்தொடர்பாளரும், இளைஞரணி துணைத்தலைவருமான SG சூர்யா கட்சி தலைமை அரச குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.