தமிழக கோவில்களை அழிப்பதற்காக இந்து அறநிலையத்துறையின் மசோதா! இந்து முன்னணி ஆளுநரிடம் அளித்த மனு!!

By : G Pradeep
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நிர்வாகிகள் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும் அங்கு இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன்ஜி, மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநிலச் செயலாளர் சேவுகன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உட்பட அனைவரும் இருந்துள்ளனர்.
அவர்கள் அளித்த மனுவில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் நிதிகள் ஆகியவற்றை கொண்டு கல்வி நிறுவனங்கள், இசைப் பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் போன்றவற்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த மசோதாவால் தமிழகத்தில் இருக்கும் பல கோயில்கள் அழிக்கப்படும் என்றும், நிலங்கள் கொள்ளை அடிக்கப்படும் என்றும், கோவில் நிதியில் ஊழல் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டது.
மேலும் ஆளுனரிடம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் குறித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதித்துறையை மதிக்கவில்லை என்றும், நீதி துறையை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது நீதித்துறையை மதிக்க வேண்டாம் என்று மக்கள் மத்தியிலும் எண்ணம் எழும் வாய்ப்பு இருப்பதாக கூறி கவலையை வெளிப்படுத்தினர்.
