நான் போட்ட புள்ளி அரசியல் சுனாமியாக மாறும் - ரஜினி பரபரப்பு பேச்சு
நான் போட்ட புள்ளி அரசியல் சுனாமியாக மாறும் - ரஜினி பரபரப்பு பேச்சு

கடந்த வாரம் தனது அரசியல் நிலைபாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசிய நிலையில் அது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஊடகத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி "எல்லோரது பேச்சைக் கேட்பர் உருப்பட மாட்டார். யார் பேச்சையும் கேட்காதவரும் உருப்படமாட்டார். அரசியலில் நேரம் தான் வேலை செய்யும். சரியான நேரத்தில் ஒரு சுழல் உருவாகும். அது அலையாக மாறும்போது தான் நாம் இறங்க வேண்டும்.
அலை உருவாக வேண்டும். எம்.ஜி.ஆர். முதல்வராக சினிமா துறையிலிருந்து வந்தார். தி.மு.க. வுக்காக உழைத்தார். மிக நல்லவர். கலைஞர் முதல்வராக வருவதற்கு அவரும் ஒரு காரணம். அவரையே கட்சியை விட்டு தூக்கிப் போட்டார்கள்.
தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதற்காகத்தான் கட்சியில் இருந்து தூக்கிப் போட்டார்கள். அவரே ராஜினாமா செய்திருந்தால் அந்த பேர் வந்திருக்காது. அவரைத் தூக்கிப் போட்டார்கள். அவர் மக்கள் மத்தியில் போய் நான் என்ன தப்பு செய்தேன் என்று கேட்டார். அனுதாப அலையாக அது மாறியது. அவரது புகழும் சேர்ந்து முதல்வர் ஆனார்.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது. அப்போது தி.மு.க. வுக்கு எதிராக ஒரு அலை உண்டானது. அதனால் 1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். ஆந்திராவில் அதேபோல என் என்.டி.ஆர். ஒரு அலையை உருவாக்கினார். அந்த மாதிரி ஒரு அலைதான் முக்கியம். அந்த அலை மிக முக்கியம்.
நானும் அரசியலில் ஒரு புள்ளி போட்டேன். அது வலுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு சுழலாக உருவாகிவிட்டது. அதைத் தடுக்க முடியாது. அது மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அதை அலையாக மாற்ற வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் மக்களிடம் செல்ல வேண்டும். ரசிகர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்கும்போது மிகப் பெரிய அரசியல் சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் உள்ளது. மக்கள் கையில் உள்ளது.
நீங்கள்தான் அதை உருவாக்க வேண்டும். உங்கள் கையில்தான் அது உள்ளது" என்றார்.