ஊடகங்களில் தலைவிரித்தாடும் தி.க, தி.மு.க அரசியல் - நியூஸ்18 செய்திகளில் நடந்தது என்ன?
ஊடகங்களில் தலைவிரித்தாடும் தி.க, தி.மு.க அரசியல் - நியூஸ்18 செய்திகளில் நடந்தது என்ன?
By : Kathir Webdesk
நியூஸ்18 தமிழ் செய்தித் தொலைக்காட்சி, சமீபகாலமாக செய்திகளிலும், ட்ரெண்ட்களிலும் அதிக இடம் பெற்று வருகிறது. தி.க/தி.மு.க ஆதரவு செய்தித்தளமாக அப்பட்டமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அதன் மீது வரும் நிலையில், தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக அதன் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனின் மாமனார், திராவிடர் கழகத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பூங்குன்றன் கூறப்படுகிறது.
உண்மையில் என்ன தான் நடக்கிறது செய்தி அறைகளில்? இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என ஆராயும் நடவடிக்கையில், முன்பு நியூஸ்18, புதிய தலைமுறை செய்திகளில் பணி புரிந்த செய்தியாளர் சந்தியா ரவிசங்கர், தனது கட்டுரையில் விடை தேட முயற்சிக்கிறார். தமிழ் நாட்டில் அரசியலும், பத்திரிக்கைத் துறையும் பின்னிப்பிணைந்துள்ள வரலாற்றை விவரிக்கும் அவர், அதில் ஒரு பகுதியில் நியூஸ்18 செய்தியில் வழக்கமாக நடக்கும் சில நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு..
அங்கே வேலைபார்த்த முன்னாள் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா கூறும் போது, முதல்வரின் பத்திரிகையாளர் சந்திப்பில் இருக்கும் போது கூட செய்திக் குழுக்கள் திக தலைவர் வீரமணியின் கருத்துக் கேட்க அனுப்பப்பட்டதாகவும், திக நடத்தும் சிறு சிறு போராட்டங்கள் உதாரணமாக, கிரகணத்தன்று மூன்று பேர் உட்கார்ந்து சாப்பிடுவது, மாட்டிறைச்சி விழாக்கள் ஆகியவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், தமிழக அரசியலில் பெரும்பாலும் முக்கியத்துவமற்ற வீரமணியின் கருத்துக்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கேட்கப்பட்டதாகவும், இது திகவின் கொள்கை பரப்புவதற்காக மட்டுமே என்று கூறுகிறார். மேலும், 5 நிமிடங்கள் கூட திகவின் நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாக வந்தால் தலைமை ஆசிரியர் குணசேகரன் மிகுந்த கோபமடைவார் என்றும் கூறுகிறார்.
மேலும் காமிராவில் காட்டப்படுவது மட்டுமல்ல, அலுவலகத்திலும் இதே தான் நடப்பதாக ஒரு உதாரணம் கூறுகிறார். "குணசேகரன் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, எனது அணியில் ஒரு ஹரிகிருஷ்ணன் என்பவரை சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர் ஒரு அலுவலகப் பையனாக (அல்லது அதே போன்ற பணியில்) திக அலுவலகத்தில் இருந்தார். கேமராவைப் பயன்படுத்துவதில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. எனது எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், அவரை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஹரிகிருஷ்ணன் ஒழுங்காக வேலை செய்ய வர மாட்டார், அவர் அவ்வாறு வரும் போது, அவர் வழக்கமாக குடிபோதையில் இருப்பார். இதை நான் மீண்டும் மீண்டும் குணாவின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறுதியாக, கேமரா துறையில் மன உறுதியும், ஒழுக்கமும் குறைந்து வருவதால் ஹரிகிரிஷ்ணனை வேறு ஏதேனும் ஒரு துறைக்கு மாற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்த வேண்டியிருந்தது, " என்றார் கிருஷ்ணா. "சேனலுக்காக பல மணிநேரம் பணிபுரியும் அனுபவமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் இருக்கும்போது, அணியில் உள்ள ஒரு பையன் அவர் விரும்பியதைச் செய்ய நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
திக அலுவலகம் (பெரியார் திடல்) மூலம் வரும் பலரும் எளிதாக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் எனவும், மற்றவர்கள் கேள்வி கேட்டால் வேலை பறி போய் விடும் என்பதால் யாரும் வாயைத் திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. வைரமுத்து திமுக ஆதரவாளர் என்பதால், அவர் மீதான சின்மயியின் குற்றச்சாட்டுகளைக் குறித்து எந்த செய்தியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மாரிதாஸ் நியூஸ்18 மீது வைக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மைக்கு இந்த ஆதாரங்கள் வலுசேர்க்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து குணசேகரனிடம் கேள்வி எழுப்பியும் இது வரை எந்த பதிலும் இல்லை.