மருத்துவ அறிவு இல்லாத 7 பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் - ஆச்சரியத்தில் மக்கள்!
மருத்துவ அறிவு இல்லாத 7 பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் - ஆச்சரியத்தில் மக்கள்!
By : Kathir Webdesk
கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் கழிறைக்குச் சென்ற போது எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை சிறிதளவு வெளியே வந்துவிட்டது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால் ஆம்புலன்ஸூம் உடனடியாக கிடைக்கவில்லை, மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் மருத்துவ அறிவு இல்லாத 7 பெண்கள் கூடி தங்களது குழந்தைப்பருவ தோழியான மருத்துவர் பிரியங்கா மந்தகியை வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தப் பெண் வெற்றிகரமாக ஆண் குழந்தையைப் பிரசவிக்க உதவினார்கள்.
தற்போது மகப்பேறு மருத்துவத்தில் எம். டி. பயின்று வரும் தோழியை தொடர்பு கொண்டதாகவும் கடமைகளை நிறைவேற்றுவதில் பிஸியாக இருந்தபோதிலும் வீடியோ அழைப்பை மேற்கொண்டு பாதுகாப்பான பிரசவத்துக்கு வழி காட்டியதால் நல்ல முறையில் பிரசவம் பார்க்க முடிந்தது என்று பிரசவம் பார்த்த பெண்களில் ஒருவரான ஜோதி மடி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், இச்செய்தி குழந்தையை பெற்றெடுத்த வாசவி பதேபூர் மற்றும் பிரசவம் பார்த்த ஏழு பெண்மணிகளுக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக அமைந்தது என்றும் இவை அனைத்துமே கடவுளின் அருள் என்றும் கூறியுள்ளார் ஜோதி. வாசவிக்கு முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தையை தோழிகளின் உதவியுடன் இயற்கையாக பிரசவித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்த நிலையில் பிரியங்கா மந்தகியின் வழிகாட்டுதல் எங்களுக்கு உதவியது என்று ஜோதி கூறியிருக்கிறார்.
அமீர்கான் நடித்து த்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் இந்தியிலும் நடிகர் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் தமிழிலும் ஹிட்டான திரைப்படத்தில் வந்த காட்சியை நினைவுபடுத்தி பலரும் பேசுவதைப் பற்றி கூறும்போது அது ஒரு திரைப்படம் தான் என்றும் ஆனால் தாங்கள் நிஜவாழ்க்கையில் செய்ததாகவும் ஜோதி கூறினார். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் வசித்து வரும் ஜோதி மடி கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது கிராமத்தில் தனது தாய் வீட்டில் இருக்கிறார்.
பிரசவத்தில் ஈடுபட்ட மற்ற ஆறு பெண்கள், பெங்களூருவைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரி அங்கிதா, குடும்பப் பெண்கள் விஜயலட்சுமி மற்றும் முக்தா கம்மனஹல்லி, மாதுரி கம்மனஹல்லி, வழக்கறிஞர் மதுலிகா தேசாய், அரசுப்பள்ளி ஆசிரியை சிவலீலா பட்டாரா ஆகியோர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : https://swarajyamag.com/insta/karnataka-guided-by-doctor-on-video-call-women-with-no-medical-knowledge-help-neighbour-deliver-a-baby