இன்ஜினை நிறுத்தாமல் டிரைவர் சென்றதால் 50 மீட்டர் தூரம் தானாக ஓடிய அரசு பேருந்து - மயிலாடுதுறையில் பரபரப்பு!
இன்ஜினை நிறுத்தாமல் டிரைவர் விட்டு சென்றதால் 50 மீட்டர் தூரம் தானாக ஓடிய அரசு பேருந்து மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்.
By : Karthiga
டிரைவர் இல்லாமல் திடீரென 50 மீட்டர் தூரம் ஓடிய அரசு பஸ் அங்குள்ள சுவரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் அரசு பஸ் நேற்று முதல் சிங்கிள் மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தது. பயணிகள் இறங்கி சென்ற பின்னர் டிரைவர் பஸ்ஸில் இன்ஜினை நிறுத்தாமல் நியூட்ரல் கியரில் வைத்து இறங்கிச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஸ் தானாக ஓட துவங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து பஸ் சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரில் இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்து இரும்பு கிரில்கள் சேதமடைந்தன .
பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ் தானாக ஓட துவங்கியதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர்ந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர் . இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் பஸ்ஸை மீட்டு அரசு பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது