அடிப்படை கேள்விகள் 14 உடன் மொத்தம் 34 தகவல்களை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: வரும் ஏப்ரலில் இனிதே தொடங்குகிறது!
அடிப்படை கேள்விகள் 14 உடன் மொத்தம் 34 தகவல்களை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: வரும் ஏப்ரலில் இனிதே தொடங்குகிறது!

மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் திட்டமிட்டவாறு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடை பெறவுள்ளதாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொறுப்புடைய அதிகாரிகள் போதுமான நேரங்களை எடுத்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எந்தெந்த மட்டங்களில் அவை நடத்தப்பட வேண்டும், எவ்வாறு அதற்கான ஊழியர்களை தயார்படுத்த வேண்டும் போன்ற விவரங்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுசம்பந்தமாக பதிவாளர் ஜெனரல் விவேக் ஜோஷி கூறுகையில் " அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். அதை நினைவுபடுத்த நாங்கள் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) பணிகளும் சேர்த்து நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 2-வது கட்ட பணியும் நடைபெறும்.
முதல்கட்ட பணியோடு சேர்த்து மக்கள் பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதல் கட்ட பணியில் வீடுகள் கணக்கெடுப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும் என்றும், 2-வது கட்ட கணக்கெடுப்பு பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. மக்கள் பதிவேடு திட்டத்தில் 14 கேள்விகள் இடம்பெறும். அதில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் போன் எண், டிரைவிங் லைசென்ஸ் எண் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.