தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்!
தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்!
By : Kathir Webdesk
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்திய அங்கன்வாடி பணியாளர்களுக்கான கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில், தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.
கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் வழக்கமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது. பிரசவ தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன் கர்ப்பிணி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவசரமாக மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி சேர்ந்து விட்டாலும்கூட அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும். குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு தேசிய சுகாதார இயக்கத்தின் நிபுணர் ஆலோசகர் டாக்டர் எஸ். ரத்னகுமார் தனது உரையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று உறுதியாகக் கூறமுடியாது. அதற்கு நீண்ட கால ஆய்வு தேவை.
தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்கப்படுகின்றது பிரசவ நேரத்தின்போது உடன் இருக்க ஒருவரை அனுமதிப்பார்கள்.
இந்தக் கொரோனா காலத்தில் அதை கைவிட்டுவிடக்கூடாது. தனி நபர் பாதுகாப்பு முழுக் கவச உடையுடன் துணைவர் பிரசவ அறைக்குள் இருக்கலாம். துணை நோய்கள் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமான காலத்தை விட இப்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ரத்னகுமார் கேட்டுக் கொண்டார்.