கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்- உளவு நிறுவனங்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்!
கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்- உளவு நிறுவனங்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்!
By : Kathir Webdesk
வங்கதேசத்தில் இருந்து சென்று மியான்மரில் குடியேறி அங்கு தங்களது கைவரிசையைக் காட்டியதால் விரட்டி அடிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் பெருமளவில் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசும் அவர்களை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. தற்போது உளவு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளித்துள்ள எச்சரிக்கையில் ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிய முஸ்லிம்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் வாயிலாக குடியுரிமை பெறுவதற்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
அண்மையில் 25 ஆப்கானிய முஸ்லிம்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளதாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மதம் மாறும் ஆப்கானிய முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக டெல்லியில் இருக்கும் ஆப்கன் சர்ச் தலைவர் அடிப் அகமது மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேசம், மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்பதால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களது பூர்வீகம் வங்கதேசம் என்று குறிப்பிட்டு மதம் மாறுவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி தலைநகர் பகுதியில் 1.5 லட்சம் முதல் 1.6 லட்சம் ஆப்கானிய முஸ்லிம்கள் வசிப்பதாகவும், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்வதாகவும் அனுமானிக்கப்படுகிறது. இவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தேதியான டிசம்பர் 31, 2014க்கு முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஸ்வராஜ்யா