இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடையா? ஆலோசிக்கும் அதிபர் ட்ரம்ப்!
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடையா? ஆலோசிக்கும் அதிபர் ட்ரம்ப்!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸை உலகெங்கும் பரப்பிய சீனாவை தண்டிக்கும் விதமாக சீன நிறுவனத்தின் செயலியான டிக் டாக்கை தடை செய்யலாம் என்று நினைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் வெகு தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா வைரஸை வேறு பரப்பி விட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது சீனா. பல சீன நிறுவனங்களையும் அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல துறை நிபுணர்களையும் வேவு பார்த்ததாக கைது செய்து வருகின்றன அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள். இவற்றுள் ஒன்றாக டிக் டாக் செயலியும் சீனாவுக்காக உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் பயனாளர்களின் தகவல்களை அவர்களது அனுமதி இன்றி சீன அரசுக்கு தருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சமயத்தில் தான் இந்தியாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறி நடந்து கொண்டதால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் பதிலடி கொடுக்கும் விதமாகவும் சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு அதிரடியாக தடை செய்தது.
நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ டிக் டாக் உட்பட சில சீன செயலிகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்படும் சந்தேகத்தின் அடிப்படையில் தடை செய்வதைப் பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது அதிபர் ட்ரம்பும் கிரே டெலிவிஷன் என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் "இது ஒரு பெரிய வியாபாரம். இந்த வைரஸ் விஷயத்தில் சீனா என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்; இந்த நாட்டுக்கும் சரி இந்த உலகத்துக்கும் சரி" என்று கூறியதோடு சீனாவுக்கு எதிராக எடுக்கப் போகும் நடவடிக்கைகளில் டிக் டாக்கை தடை செய்வதும் ஒன்று என்றும் கூறியுள்ளார்.