கோவை ஈஷாவில் கால பைரவர் மண்டபத்துக்காக அடிக்கல்.!
கோவை ஈஷாவில் கால பைரவர் மண்டபத்துக்காக அடிக்கல்.!
By : Kathir Webdesk
கோவை ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள காலபைரவர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சோமவதி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 20) சிறப்பாக நடைபெற்றது. இம்மண்டபம் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசல் அருகில் அமைய உள்ளது.
இது தொடர்பாக சத்குரு அவர்கள் கூறியதாவது:
ஆடி மாதத்தில் வரும் இந்த சோமவதி அமாவாசை மிகவும் அரிய நன்நாளாகும். இந்த நாள் கால பைரவர் போன்ற சக்திவாய்ந்த செயல்முறையை நிறுவ உகந்த காலமாகும். காலா என்றால் காலம் மற்றும் இடம் என்ற இரண்டுமே சேர்ந்தது. இந்த இரண்டும் தான் நம் அனைவரின் இருப்புக்கும் அடிப்படையானதாகும்.
இது எந்த அளவிற்கு என்றால், ஒருவர் விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வு இல்லாமலோ எப்படி இந்த காலம் மற்றும் இடம் இரண்டையும் அணுக முடிகிறதோ அல்லது இந்த இரண்டின் மீது ஆளுமை கொள்ள முடிகிறதோ அதன் அடிப்பிடையிலேயே அவர் எத்தகைய ஆழமான மற்றும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வாழ்வினை வாழ்வார் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த கால பைரவர் மண்டபம் உருவாக்குவதின் குறிக்கோள் வாழ்வுக்கும், மரணத்திற்கும் உதவி செய்வதற்காக தான். வாழ்வும், மரணமும் என்று நான் சொல்லும் போது வாழ்க்கை எனும் வீரியமான செயல்திறனையும், மரணம் எனும் ஆழமான அசைவின்மையையும் குறிப்பது ஆகும். இந்த இரண்டுமே நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நாம் ஈஷா யோக மையத்தில், சக்தி வாய்ந்த கால பைரவருக்கான வீரியமான பிந்துவை, ஜூலை 18ம் தேதி நிறுவி இருக்கிறோம். இந்த செயல்முறை முழுமை அடைய 4356 நாட்கள் ஆகும். அதாவது அது முழுமையான சூரிய சுழற்சி ஆகும்.
இது 2032-ம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முடிவடையும். ஆனால் உயிருள்ள செயல்முறையாக இருக்கும் மூர்த்தியை 7 அல்லது 8 மாதங்களுக்குள் நிறுவி விடுவோம். அதற்கு வெகு முன்னரே மண்டப கட்டிட பணிகள் முடிக்கப்படும். நாம் ஈஷா யோக மையத்தை ஒரு சக்தி வாய்ந்த தீர்த்த க்ஷேத்திரமாக உருவாக்கி உள்ளோம்.
மனித குலத்தின் இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் முழுமையான ஆன்மீக செயல்முறைகளுக்கும், வாழ்வின் பிற செயல்முறைகளுக்கும் தேவையான பிரதிஷ்டைகளும், சக்தி உதவிகளும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கால பைரவர் ஈஷாவின் சேத்திர பாலனாக (சக்திநிலையில் பாதுகாவலராக) இருப்பார். காலபைரவர் பிரதிஷ்டை முழுமையடையும் போது கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் ஈஷாவின் பிரதிஷ்டைகளும் முழுமை அடையும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
கொரோனா சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஆன்லைன் முறையில் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.