ராமர் கோவில் வடிவில் கட்டப்படும் அயோத்தி ரயில்வே நிலையம் - உயர்தர சேவை அளிக்க வசதிகளை மேம்படுத்தும் ரயில்வே.!
ராமர் கோவில் வடிவில் கட்டப்படும் அயோத்தி ரயில்வே நிலையம் - உயர்தர சேவை அளிக்க வசதிகளை மேம்படுத்தும் ரயில்வே.!
By : Kathir Webdesk
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் தோற்றத்தில் அமைக்கப்படும் புதிய ரயில் நிலையத்தின் பணிகள் ஜூன் 2021க்குள் நிறைவடைந்து விடும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணியை RITES என்ற அரசு அமைப்பு எடுத்து நடத்துகிறது. இதற்காக ₹ 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சற்று முன்னதாகவே இந்த வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஏற்படுத்தக்கூடிய இந்த வசதிகள் அனைத்தும் மக்களுக்கு பயன் தரக் கூடியதாகவே இருக்கும். இரண்டு கட்டங்களாக நடந்து வரும் இந்த பணியில் ஏற்கனவே இருக்கும் தளங்கள் மற்றும் பிற பகுதிகளை மேம்படுத்துவதுடன் இரண்டாவது கட்டத்தில் புதிய வடிவமைப்பில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு இன்னும் பிற வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
பல யுகங்களாக ராமரின் பிறப்பால் புனிதம் அடைந்த அயோத்தி நம்பிக்கை மற்றும் பக்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக திகழ்ந்து வருகிறது. இந்திய ரயில்வேக்கும் அயோத்தி மிக முக்கியமான இடமாகும். எனவே அயோத்திக்கு வரும் புனிதப் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை தருவதற்காக சுத்தம், சுகாதாரம் மற்றும் உயர்ந்த தரத்துடன் இடம்பெற்றிருக்க கூடிய ரயில் நிலையத்தை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
அயோத்தி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ஒரு பகுதியாக டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஓய்வு அறையை விரிவுபடுத்துவது மற்றும் ஏர் கண்டிஷனிங் மற்றும் படுக்கை வசதியுடன் கூறிய மூன்று ஓய்வு அறைகள் கட்டுவதுடன் கடைகள், உணவகங்கள் போன்ற இன்னும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் 17 படுக்கைகள் கொண்ட ஆண்கள் தங்குமிடம் மற்றும் 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் போன்ற வசதிகளுக்காக பணிகள் நடந்து வருகின்றன.
உலகெங்கும் இருந்து அயோத்தி வரும் ராம பக்தர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் முயற்சிகளில் தொடர்ந்து பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. மேலும் அதிக எண்ணிக்கையில் கழிவறைகள் கட்டப்டுவதோடு உயர்தர வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளும் செய்து தர உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.