இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் நீங்கள்தான்.. சீனா மீது டிரம்ப் கடும் பாய்ச்சல்..
இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் நீங்கள்தான்.. சீனா மீது டிரம்ப் கடும் பாய்ச்சல்..

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் முதலில் வந்தது. அது கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம் சீனாவிடம் வெளிப்படை தன்மை இல்லை. எல்லாவற்றையும் மூடிவைக்கும் பழைய வழக்கம்தான் இதற்கு காரணம் என்றார். என்றாலும் சீன அதிபர் அந்த நாட்டு மக்களை நேசிக்கிறார் என்பது தெரியும், அதே போல அவரையும் நாங்கள் நேசிக்கிறோம் என்றார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பேசினார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா தகவல்களை பகிர்ந்து கொள்வதை தாமதப்படுத்தியது. இந்த தகவல்கள் உடனே தெரிந்திருக்க வேண்டியதாகும். அதை தெரிந்து கொள்வதற்கு உலகத்துக்கு உரிமை உள்ளது. உலகத்துக்கு இந்த ஆபத்து இருப்பது முதலில் சீனாவுக்கு தெரியும். மேலும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் மற்றும் தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.
இதில் சீனாவுக்கு முதலில் உதவ விரும்பிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஆனது. அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம். உலக மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம் ஆகும். இது அரசியல் விளையாட்டு அல்ல. பழிவாங்கலும் அல்ல.
டுவிட்டர் மற்றும் உலக அளவில் இருந்து தவறான தகவல்களை உலக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அரசிடமிருந்து சிலவும், தனிநபர்களிடம் இருந்து பலவும் வருகின்றன. சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்தான் தவறான தகவல் பரப்புவதில் ஈடுபட்டன என்றார் அவர் .