பிரதமர் ஆலோசனைக்குப் பின் அண்டை மாநில எல்லைகள் இன்று காலை முதல் மூடல்: தமிழக முதல்வர் அறிவிப்பு
பிரதமர் ஆலோசனைக்குப் பின் அண்டை மாநில எல்லைகள் இன்று காலை முதல் மூடல்: தமிழக முதல்வர் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் ஏற்கனவே மக்கள் கூடும் பல இடங்கள் கல்வி நிலையங்கள் உட்பட 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று மாலை அனைத்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேச மாநில எல்லைகள் இன்று முதல் 31ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதனால், அனைத்து போக்குவரத்தும் முழுமையாக முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழ் குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக இன்று (21ம் தேதி) முதல் 31.3.2020 வரை மூடப்படுகிறது.
இந்த சாலைகளில், கீழ்க்கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
§ அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், காஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள்.
§ இதர சரக்கு வாகனங்கள்
§ தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.
§ பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள். எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.