கொரோனா அச்சுறுத்தல் - திரையரங்குகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள்..
கொரோனா அச்சுறுத்தல் - திரையரங்குகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள்..
By : Kathir Webdesk
தற்போதைய நிலவரப்படி ஊரடங்கு அடுத்த மாதமே முடிவுக்கு வந்தாலும் திரையரங்குகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அப்படித் திறக்கப்பட்டாலும் கொரோனா இந்தியாவிலிருந்து முற்றிலுமாக மறையும் வரை எல்லா பொதுமக்கள் கூடும் இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். இதனை எதிர்கொள்ளத் திரையரங்குகள் தாங்கள் எவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப் போகிறோம் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளைக் கைவசம் வைத்திருக்கும் பி.வி.ஆர் தங்கள் திரையரங்குகளின் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனிங்க், ஒவ்வொரு காட்சி நிறைவடைந்த பின்னரும் திரையரங்கு மற்றும் கழிவறைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், ஒவ்வொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு நுழைவு சீட்டை விற்பது, பார்வையாளரின் இருக்கைக்கே சென்று உணவுப் பொருட்களைக் கொடுப்பது, எந்த ஒரு இடத்திலும் கூட்டம் சேராதவாறு பார்த்துக் கொள்வது ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உதாரணமாக ஒரு திரையரங்கில் 100 இருக்கைகள் இருந்தால் 50 நுழைவு சீட்டுகளை மட்டுமே திரையரங்குகள் விற்பனை செய்யும். இதனால் தின வசூல் குறைந்தாலும் 1 வாரம் ஓட வேண்டிய படத்தினை 2 வாரங்கள் ஓட்டி வசூலைப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.
இதனையே மற்ற திரையரங்குகளும் பின்பற்ற ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த நடைமுறை குறைந்த பட்சம் 6 மாதங்களுக்காவது பின் பற்றப்படும் எனக் கூறப்படுகிறது.