ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம் - இனி அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கப்போகிறது..?
ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆரம்பம் - இனி அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கப்போகிறது..?
By : Kathir Webdesk
ஊரடங்கு தளர்வின் இரண்டாம் கட்டம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைவதால், உள்துறை அமைச்சகம் அடுத்த கட்டத்திற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிக்கிறது. ஊரடங்கு தளர்வின் மூன்றாம் கட்டம் குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 1க்கு முன்பு உள்துறை அமைச்சகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வின் அடுத்த கட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மெட்ரோ சேவைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் கடுமையான சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
அனைத்து மாநில மற்றும் மத்திய வாரியங்களும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டாலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே தென்படுகிறது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்கத் தொடங்கியுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) தெரிவித்துள்ளது. முன்னதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த விவகாரத்தில் பெற்றோரிடமிருந்தும் கருத்துக்களைக் கோருவதாகக் கூறியது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த நேரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க பெற்றோர்கள் ஆதரவாக கருது கூறவில்லை.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி , நாடு முழுவதும் உள்ள சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்திற்கு பரிதுரைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கை வந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கிருமியின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா அரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டவுடன், அனைத்து மாநில அரசாங்கங்களும் எதைத் திறக்க வேண்டும், எதைத் திறக்கக்கூடாது என்பதற்கான அந்தந்த வழிகாட்டுதல்களை முன்வைக்கும். மேலும் உத்தரவு வரும் வரை உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் சில சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பின் தன்மையை பொருத்து மாநிலங்கள் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.