மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு கொரோனா பரிசோதனை - விசாரணை வளையத்தில் டெல்லி நிஜாமுதீன் மசூதி நிர்வாகம்!
மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு கொரோனா பரிசோதனை - விசாரணை வளையத்தில் டெல்லி நிஜாமுதீன் மசூதி நிர்வாகம்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மத கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது.
கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தெரியவந்தது.
தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து இன்று டெல்லி அதிகாரிகள் இம்மசூதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.