100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை : சவுதி இளவரசரை இந்தியாவின் பக்கம் நிற்க வைத்த பிரதமர் மோடி
100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை : சவுதி இளவரசரை இந்தியாவின் பக்கம் நிற்க வைத்த பிரதமர் மோடி
By : Kathir Webdesk
இந்தியா வந்த சவுதி அரேபிய நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை, பாரத பிரதமர் மோடி நேரில் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமானத்தை விட்டு இறங்கியதும், அவரை கட்டித் தழுவி பிரதமர் மோடி வரவேற்றார். அதோடு "சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது” என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
பிறகு, நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை சவுதி இளவரசர் சல்மான் ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்து சவுதி இளவரசர் சல்மான் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பிரதமர் மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையே முறைப்படியான பேச்சு நடந்தது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதல், உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்தின் கொடிய அடையாளம் எனவும், இது மனிதகுலத்துக்கே பேராபத்து என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளுக்கு அனைத்து வகையான நெருக்கடிகளையும் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தீவிரவாதத்துக்கு உதவி செய்தலையும், வசதிகள் செய்துகொடுத்தலையும் முடிவுக்கு கொண்டுவருதல், தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களைத் தண்டித்தல் குறிப்பாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவிடமாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விஷயங்களில் இந்தியாவுடன், சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2 லட்சம் இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை
10 லட்சம் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை கூடுதலாக 35 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த (2018) ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய சவுதி அரசு அனுமதி அளித்தது.
இதனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.
இந்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பல மாநில அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றார். இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இளவரசர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இங்கிருந்து 2 லட்சம் இந்திய இஸ்லாமியர்கள் இனி ஹஜ் யாத்திரை செய்ய முடியும்.
100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
சவுதி அரேபியா இந்தியாவில் விவசாயம், உற்பத்திதுறை, எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது. அதில், இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் முதல் கூட்டு முயற்சியான "West Coast Refinery and Petrochemical Project" எனப்படும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு 44 பில்லியன் அமெரிக்க டாலரும், பொது முதலீட்டு நிதியாக 10 பில்லியன் டாலரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலிமை பெறும். இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
850 இந்திய கைதிகள் விடுதலை
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் படி சவுதி அரேபியா சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபிய இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகும் பாகிஸ்தான் பக்கம் சவுதி அரேபியா நிற்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தியா வந்திருந்த சவுதி பட்டத்து இளவரசரை முற்றிலுமாக பாரத தேசத்தின் பக்கம் நிற்க வைத்திருப்பது, பாரத பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்த மாபெரும் சரித்திர வெற்றி என்பதில் சிறிதும் ஐயமில்லை.