அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை
அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை
By : Kathir Webdesk
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் அத்தியாவசிய கடைகளின் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 1 மணி அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய விற்பனையாளர்கள் பொருட்களை பதுக்கி, விலையை ஏற்றி விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் இயங்கும் ரங்கபிள்ளை வீதியில் உள்ள கடைகளில் கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி, அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது எனவும், அவ்வாறு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மேலும் பொருட்களை வாங்க வரும் மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் நிர்ணயக்கப்படும் விலைப் பட்டியலை அனைத்து கடைகளின் முன்பு மக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலே அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.