கார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு - மாபெரும் சீர்திருத்த நடவடிக்கை : உற்பத்தி பெருக வாய்ப்பு!
கார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு - மாபெரும் சீர்திருத்த நடவடிக்கை : உற்பத்தி பெருக வாய்ப்பு!
By : Kathir Webdesk
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இரு வாரங்களுக்கு முன்னர் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து ஜிஎஸ்டி., வரியை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் உடன் செஸ் மற்றும் இதர வரிகளும் அடக்கம். எந்த ஊக்கத்தொகையும், சலுகைகளும் பெறாத உள்நாட்டு நிறுவனங்கள் 22 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தினால் போதும். அக்டோபர் 1க்கு பிறகு துவங்கப்படும் புதிய உள் நாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 17.01 சதவீதமும், எந்த சலுகையும் பெறாதாவர்களுக்கு 15 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைக்கப்பட்ட எந்தவொரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனமும் 15 சதவீத வரி செலுத்தலாம். எந்தவொரு வரி விலக்கையும் பெறாத நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டில் இருந்து புதிய வரி விகிதம் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கியின் முயற்சி:
பொருளாதார சுணக்கம் மேலும் தொடர்ந்தால்,
வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, தொடர்ந்து 4 முறை வங்கி வட்டி
விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மீண்டும் அதுபோன்ற நடவடிக்கை
எடுக்கப்படும் என்று ஆர்பிஐ ஆளுநர் கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற புளூம்பர்க் இந்தியா செய்தி நிறுவனத்தின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை கவனத்தில் கொண்டே நிதிக்கொள்கை வகுக்கப்படுகிறது. இதில், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமாகியுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் யாருமே எதிர்பாராத வகையில் குறைந்து வருகிறது. இதனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். பொருளாதார சுணக்கம் தொடர்ந்தால் வங்கி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அனைவருக்கும் எளிதாக பணம் கிடைக்கச் செய்வதன் மூலம், அதாவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப்போதைய நிலையைச் சமாளித்துவிட முடியும். இதற்காக பட்ஜெட்டில் அறிவித்த செலவுகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம். சிக்கன நடவடிக்கை, வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதைக்கு மேற்கொள்ளக் கூடாது. அடிப்படைக் கட்டமைப்புரீதியாக நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. சர்வதேச அளவில் இப்போது பெரிய அளவில் பொருளாதார சுணக்கமில்லை. எனவே, நமது பொருளாதாரம் தற்காலிக சுணக்கத்தில் இருந்து மீளும் என்று தெரிவித்துள்ளார்.