நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை: கரை புரண்டு ஓடப்போகும் காவிரியும், வைகையும் !! மகிழத் தொடங்கினர் விவசாயிகள்!!
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை: கரை புரண்டு ஓடப்போகும் காவிரியும், வைகையும் !! மகிழத் தொடங்கினர் விவசாயிகள்!!
By : Kathir Webdesk
தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 112.20 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 113.60அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1272 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு ஆணை நிரம்பி வழிந்தால் வைகையாற்றுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் தற்போதைய நிலை வைகை கரை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அதேபோல குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த கன மழை தொடர்ந்து அதிகரித்தால், இந்த வருடம் காவிரி பங்கீட்டில் கர்நாடகா-தமிழகம் நடுவே மோதல் போக்கு உருவாகாது. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தலைக்காவேரி பகுதியில், 149.2 மிமீ மழை பெய்துள்ளது. கேரளாவில் வயநாடு பகுதியில் 92 மிமீ மழை பெய்துள்ளது. இதெல்லாம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளாகும். தற்போதைய நிலையில், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்துள்ளது.இதன் மூலம் தமிழக வாழ்வாதார நதிகளான வைகையாறும், காவிரியும் அதிக பலன் பெறவுள்ளன.