முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி - ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ள மக்கள் நெகிழ்ச்சி!
முகக்கவசங்கள் தைத்துக் கொடுக்கும் குடியரசுத் தலைவர் மனைவி - ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ள மக்கள் நெகிழ்ச்சி!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு தைத்து கொடுத்து வருகிறார்.
உலக முழுவதும் பரவி வரும் கரோனா நோயத்தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் தில்லியில் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முகக்கவசங்களை தைத்து கொடுக்கிறார் சவீதா கோவிந்த்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஒரு பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை தையல் இயந்திரத்தில் அமர்ந்து தனது கையாலே முகக்கவசங்களை தைத்து வருகிறார். முகக்கவசங்களை தைத்துக்கொடுப்பதன் மூலம், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராக போராடலாம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் மனைவியே கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்ட களத்தில் பணி செய்வது அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. மேலும் சவீதா கோவிந்த் தனது முகத்தை சிவப்பு துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்துகொண்டு தையல் இயந்திரத்தில் அமர்ந்து முகக்கவசங்கள் தைக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களின் படி, அனைவரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்திருந்தது. முகக்கவசங்களை அணிவது மட்டுமல்லாமல், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.