தொழிலதிபரை கடத்தி மிரட்டல் : தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தொழிலதிபரை கடத்தி மிரட்டல் : தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
By : Kathir Webdesk
திருப்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சீனிவாசன் என்பவரை இரண்டு நாட்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக திருப்பூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெ.அன்பழகன் உயர்நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி வேல்முருகன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2008ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து, 2011 ஆம் ஆண்டு தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், புகாரில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும் எனக் கூறி, அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.