வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் மற்றும் சுப்ரமணியன் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் - நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், Dr.தமிழிசை, தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி! #PulwamaTerrorAttack
வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் மற்றும் சுப்ரமணியன் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் - நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், Dr.தமிழிசை, தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி! #PulwamaTerrorAttack
By : Kathir Webdesk
நேற்று முன்தினம் மாலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 CRPF வீரர்கள் வீரமணம் அடைந்தனர். அவர்களில், தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர். அவர்களது உடல், காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராணுவ தளபதி, காங்கிரஸ் தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று, வீரர்களின் உடல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிவசந்திரன் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு, சிவச்சந்திரன் உடல் திருச்சி விமான நிலையத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். சிவசந்திரன் உடலை பார்த்து அவர்களுடைய சகோதரர்கள் உட்பட நான்கு பேர், உறவினர்கள் கதறி அழுதனர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடாகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசா மணி, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜய் லட்சுமி, சுற்றுலா அமைச்சர் நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்னவேல் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அங்கிருந்து, சிவசந்திரன் உடல் அரியலூருக்கு எடுத்து செல்லப்பட்டது. வழியில் ஏராளமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுமார் 4 மணியளவில், அவரது கார்குடி கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு, குடும்பத்தினர், உறவினர் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்தகுமார் ஹெக்டே, தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
CRPF வீரர் சுப்ரமணியன் உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து வாகனம் மூலம், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அமைச்சர், அதிகாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.