கோவிட்-19க்கு எதிராகப் போராட தேசிய கடமையை ஆற்ற என்.சி.சி. மாணவர்கள் ஆயத்தம்..
கோவிட்-19க்கு எதிராகப் போராட தேசிய கடமையை ஆற்ற என்.சி.சி. மாணவர்கள் ஆயத்தம்..

கோவிட்-19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவும் வகையில் "என்சிசி மாணவர் யோக்தானைப் பயன்படுத்துதல்" திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படையினரின் சேவைகளை வழங்குவதற்கு தேசிய மாணவர் படை (NCC) அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காக தனது தேசிய மாணவர் படையினருக்கான தற்காலிக வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய மாணவர் படை அமைப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் நிவாரண நடவடிக்கைகளையும் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் விரைவுபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,
உதவித் தொலைபேசி எண்கள் மற்றும் அழைப்பு மையங்களை நிர்வகித்தல், நிவாரணப் பொருள்கள்,மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை விநியோகித்தல், சமுதாயத்தினருக்கு உதவுதல், தகவல் தரவு மேலாண்மை மற்றும் வரிசையில் நிற்க வைத்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட வேலைகளில் தேசிய மாணவர் படையினர் (NCC) ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி நெறிமுறைகளின்படி சட்டம் ஒழுங்கு சூழலை கையாளும் பணியில் அல்லது இராணுவப்பணிகளில் அல்லது நோய்த்தொற்று ஏற்படக்கூடிய இடங்களில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
18 வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவு தன்னார்வல மாணவர் படையினர் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள். 8 முதல் 20 எண்ணிக்கையிலான மாணவர்கள் சிறு குழுவாக உருவாக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்கள் நிரந்தரப் பயிற்சி அலுவலர் அல்லது அசோசியேட் என்சிசி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் பணியாற்றுவார்கள்.
மாணவர் படையினர் பணிக்காக அனுப்பப்படுவதற்கு முன்பு கள நிலவரங்களும் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளும் அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது