நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கு மேலும் 16 நாட்களுக்கு நீட்டிப்பு : ஒடிசா மாநில முதல்வர் கறார் முடிவு..
நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கு மேலும் 16 நாட்களுக்கு நீட்டிப்பு : ஒடிசா மாநில முதல்வர் கறார் முடிவு..
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க 8 மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 17-ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடவும் முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரயில்கள், விமானங்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை இயக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார். ஏராளமான ஒரிசாவினர் பல மாநிலங்களில் தவித்து வருவதாகவும், அவர்களை கண்ணும் கருத்துமாக மற்ற மாநில அரசுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எனது மாநிலத்தில் உள்ள வெளி மாநில மக்களை தங்கள் அரசு நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை பொறுத்தவரை ஒடிசா 16-வது இடத்தில் உள்ளது. இதுவரை ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.