உற்பத்தியாளராக மட்டுமே இருந்த விவசாயிகள் இனி வணிகர்களாக.. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம்!
உற்பத்தியாளராக மட்டுமே இருந்த விவசாயிகள் இனி வணிகர்களாக.. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம்!

நாட்டில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு, 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இதுவரை உற்பத்தியாளராக மட்டுமே இருந்த விவசாயிகள், இனிமேல் இந்த மையங்கள் மூலம் வணிகமும் செய்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளுக்காக இந்த அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளைப் பட்டியலிட்ட பிரதமர், குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், மண்வள அட்டை, 100 சதவீதம் வேம்பு தடவிய யூரியா, பல தசாப்த காலங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்களை பூர்த்தி செய்தல் என விவசாயிகள் தொடர்பான எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் இந்த அரசு முனைப்புக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.
விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்கள் மூலமாக, விவசாய உற்பத்திப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இன்னும் நல்ல விலைக்கு விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே வகையில், நாட்டில் `உயர் வளர்ச்சி நோக்கம் தேவைப்படும் மாவட்டங்கள்' என்ற வகையில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், குறைந்தபட்சம் ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 கோடி விவசாயக் குடும்பங்கள், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசின் உதவிகளைப் பெறும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், இந்த உதவிகள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் பெயரில், புந்தேல்கண்ட் பெயரில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், விவசாயிகளின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையுடன் இப்போதைய நிலையை அவர் ஒப்பீடு செய்தார். பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீடு மற்றும் பிரதமரின் ஜீவன் சுரக்சா காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ``நெருக்கடியான காலங்களில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைப்பதை இத்திட்டங்கள் உறுதி செய்யும்'' என்று பிரதமர் கூறினார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம் உருவாக்கப் பட்டிருப்பதாக பிரதமர் திரு. மோடி அறிவித்தார். தனது விளைநிலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிராமப்புற சந்தை (Haat) வசதி கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் எந்தவொரு சந்தையுடனும் விவசாயி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் வேளாண் பொருளாதாரத்தில் கிராமப்புற சந்தைகள் புதிய மையங்களாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.