மு.க.ஸ்டாலின் வார்த்தைகள் அநாகரிகமானவை; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்..
மு.க.ஸ்டாலின் வார்த்தைகள் அநாகரிகமானவை; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்..
By : Kathir Webdesk
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நேற்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்:
அதிமுக சார்பில் அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்னும் பல கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்ல செய்தி கிடைக்கும். எந்தத் தொகுதியில் யார் நின்றாலும் அவர்கள் பாஜகவின் வேட்பாளர் என்ற மனநிலையில் பணி செய்வோம்.
மோடி மீண்டும் நாட்டை ஆள வேண்டும் என்ற தேவை உள்ளது. அவரின் திட்டங்கள் உலக அரங்கில் இந்தியாவை முதல் நிலைக்குக் கொண்டு வருவதாக உள்ளது.
மதம், சாதி வேறுபாடுகளைக் கடந்து கைகோக்க வேண்டிய சூழ்நிலை இனிவரும் 5 ஆண்டுகளுக்கு நிகழவிருக்கிறது. அதற்கு இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். கூட்டணிக் கட்சிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டதா என்று பார்க்கத் தேவையில்லை.
நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்கள் ஒருபுறமும், நாட்டு நலனுக்காக ஒன்றுபடுபவர்கள் ஒருபுறமும் உள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சாக்கடை என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.
ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார். சாக்கடை எங்கு ஓடுகின்றது என்று சந்தேகம் ஏற்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இது கண்டனத்துக்குரியது என்றார்.