பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வியூகம் - பயங்கரவாதிகளுக்கு இந்தியா கொடுக்கும் பதிலடி! #PulwamaRevenge
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வியூகம் - பயங்கரவாதிகளுக்கு இந்தியா கொடுக்கும் பதிலடி! #PulwamaRevenge
By : Kathir Webdesk
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு உதவியவர்களுக்கும் பதிலடி கொடுக்க மத்திய அரசு முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் பயங்கராவாதிகள் நடத்திய தற்கொலைப்படை கார் குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இதனிடையே பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை நாட்டுக்கு அழைத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருடன் ஆலோசனை மேற்கொண்டது.
இதனிடையே ரா உளவுத்துறை தலைவர் ஏ.கே.தாஸ்மானா, ஐ.பி உளவுத்துறையின் கூடுதல் இயக்குநர் அரவிந்த் குமார், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் குபா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும், எல்லையில் உள்ள ராணுவ நிலவரம் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். உரிய பதிலடியை இந்தியா விரைவில் கொடுக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.