உதவும் விதிமுறையில் மாற்றம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்.!
உதவும் விதிமுறையில் மாற்றம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்.!
By : Kathir Webdesk
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கரோனா நிவாரண உதவி புரிபவர்கள் தன்னிச்சையாக உதவாமல் அரசு மூலம் மட்டுமே உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசுக்குப் பலரும் கண்டனங்களும் எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இதில் மாற்றம் செய்து அரசு அறிவித்திருந்தது. அதில் யார் வேண்டுமானாலும் உதவலாம் என்றும் அதற்கான விதிமுறைகளையும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ராகவா லார்னஸ் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் "கரோனா ஊரடங்கில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், அதைப் பற்றித் தெளிவாக, நடைமுறை விளக்கம் தந்த காவல்துறை ஆணையருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு கரோனா வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெரும் இக்கட்டான நிலை உள்ளது!
ஆகவே, தமிழக அரசினால் அறிவுறுத்திச் சொல்லப்படும் சமூக விலகலைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தன்னார்வலர்களும், என்னுடைய ரசிகர்கள் மற்றும் திருநங்கைகள், அபிமானிகள் உள்பட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது!
நாம் மக்களுடைய பசிப்பிணியையும் போக்க வேண்டும். அதே சமயம் கரோனா வைரஸ் பரவாமலும் அரசின் அறிவுரைப்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நானும் நமது தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன்
அதைப்போலவே அனைவரும் உதவிடுவோம். கரோனாவை வென்றிடுவோம்! அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்". என தெரிவித்துள்ளார்.