எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் - மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை : மத்திய அரசின் அதிரடி!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் - மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை : மத்திய அரசின் அதிரடி!

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான கால விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறன் சதவீதம், எந்த வகையான மாற்றுத் திறனாளி போன்றவை விண்ணப்பத்தில் சரியாக உள்ளதா என்பதைக் கண்டறிவது இவர்களின் பணியாகும்.
தற்சமயம் 7 லட்சம் தேசிய அடையாள அட்டைகள் வரை வழங்கப்பட உள்ளன. புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன.
பயனாளிகள் அளித்த ஆவணங்களில் மாற்றுத் திறன் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மருத்துவர்தான் பரிசீலனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு, உறுதிப்படுத்தியவுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு முன்னர் இப்பணியை மாவட்டத்துக்கு ஒரு மருத்துவர் மேற்கொண்டு வந்தனர். தற்போது பணிகளை விரைவுபடுத்த சுகாதாரத் துறையின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.