Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலின் ஒண்ணும் நாத்திகவாதி இல்லை-அத்திவரதரை தரிசிக்க கூட வருவார்: Dr.தமிழிசை!

ஸ்டாலின் ஒண்ணும் நாத்திகவாதி இல்லை-அத்திவரதரை தரிசிக்க கூட வருவார்: Dr.தமிழிசை!

ஸ்டாலின் ஒண்ணும் நாத்திகவாதி இல்லை-அத்திவரதரை தரிசிக்க கூட வருவார்: Dr.தமிழிசை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2019 5:18 AM GMT


கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோற்றமளிக்கும் அத்திவரதர் தரிசனம் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.


நின்ற கோலத்தில் காட்சியளித்துவரும் அத்திவரதரை தரிசிக்க பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிபுரத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 4)சென்றார். தரிசனம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “கொள்கை மாறுபாடு இருந்தாலும் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும். அப்படி வருகை தந்தால் அவரை நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.


திமுகவைச் சேர்ந்த பலர் அத்திவரதரை தரிசனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறியவர், “முன்பெல்லாம் ஒளிவுமறைவாக வருவார்கள். இப்போது வெளிப்படையாக வருகிறார்கள். திமுகவில் ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது. ஏன் ஸ்டாலின் கூட நாத்திகவாதி இல்லை. அவருக்கு எல்லா நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் அவருடைய மனைவியை விட்டு அனைத்து இறை நம்பிக்கையையும் பூர்த்தி செய்து கொள்கிறார். இதை விமர்சனம் செய்யவில்லை. நான் வரவேற்கிறேன். இதுபோல அத்திவரதரை நேரடியாக தரிசிக்கும் காலம் ஸ்டாலினுக்கு வரும்” என்று குறிப்பிட்டார்.


மேலும், “திமுக தொண்டர்கள் அனைவரும் மாறிவிட்டனர். இவர் மட்டும்தான் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் வெளிப்படையாக வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை” என்ற தமிழிசை, “தொண்டர்கள் வழி தான் தன் வழி என ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அவரும் மாறவேண்டியது தானே” என்றும் கேள்வி எழுப்பினார்.


ராஜாத்தியம்மாள் தரிசனம்


கலைஞரின் துணைவியாரும், கனிமொழி எம்.பி.யின் தாயாருமான ராஜாத்தியம்மாள் நேற்று அத்திரவரதரை தரிசனம் செய்தார். அப்போது துளசி மாலை,பாதாம், முந்திரி, உலர் பழங்களை வழங்கினார். சில வாரங்களுக்கு முன்பு சயனகோலத்தின் போதும் தரிசனம் செய்த ராஜாத்தியம்மாள், மீண்டும் நின்ற கோல அத்திவரதரை தரிசனம் செய்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News