மஹாராஷ்டிராவில் போலீசார் கண் முன்னே கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட ஹிந்து சாதுக்கள், எங்கே நடுநிலையாளர்கள் ?
மஹாராஷ்டிராவில் போலீசார் கண் முன்னே கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட ஹிந்து சாதுக்கள், எங்கே நடுநிலையாளர்கள் ?
By : Kathir Webdesk
போலீசார் முன்னிலையிலேயே ஹிந்து சாதுக்களை அடித்தே படுகொலை செய்த பயங்கரமான சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மும்பைக்கு அருகில் உள்ள கிராமமான பால்கரில், திருடர்கள் என்று சந்தேகித்துக் கொண்டு 2 சாதுக்கள் உட்பட மூன்று பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். குழந்தைகளை கடத்திச் செல்ல அவர்கள் வந்திருப்பதாக பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில் இரண்டு சாதுக்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் கைலாஸ் ஷிண்டே கூறுகையில், "அவர்கள் மூவரின் உடலும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 110 கிராமவாசிகள் விசாரணைக்கு காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.", என்று கூறினார்.
இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து நாசிக் நோக்கி பயணித்தபோது 100-க்கும் மேற்பட்ட வெறித்தனமான கூட்டம் ஒன்று மூன்று பேரையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமவாசிகள் அவர்களை திருடர்கள் என்று கருதி அவர்களைத் தாக்கத் தொடங்கினர். 70 வயதான ஹிந்து சாதுவை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவும் வன்முறைக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளானது.
2 சாதுக்கள் உட்பட மூன்று பேரும் ஒரு காரில் நாசிக் சென்று கொண்டிருந்தனர். வெறித்தனமான கூட்டம் ஒன்று அவர்களது காரை நிறுத்தி, மூவரையும் காரிலிருந்து வெளியே இழுத்துச் சென்றது. கும்பலால் கொல்லப்பட்ட மூன்று பேரில், 2 பேர் இந்து சாதுக்கள். மூன்றாவது, அவர்கள் பயணித்த வாடகை காரின் ஓட்டுநர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை குழு அந்த இடத்தை அடைந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி கூறினார். மூன்று பேரையும் காவல்துறையினரால் காப்பாற்ற முடியவில்லை. காவல்துறை வாகனங்களும் வெறிபிடித்த குண்டர்களால் தாக்கப்பட்டன. இந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சுமார் 110 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, "2 சாதுக்களையும், ட்ரைவர் ஒருவரையும் தாக்கிய அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் தப்பிவிட முடியாது. அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்", என்று கூறியுள்ளார்.
எனினும் இந்த கொடூர சம்பவதிற்கு வேறு ஏதேனும் மத ரீதியான காரணங்கள் இருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.