தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள்: தாழ்வான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு.!
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள்: தாழ்வான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு.!

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையான வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 குழுக்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என்றும், 18 குழுக்கள் தயாராக வைக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை இவர்களின் பணிகளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் கீழே விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இவர்கள் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.