அரசு முன்னெச்சரிக்கையால் பெரும் சேதங்கள் தவிர்ப்பு.. அமைச்சர் பெருமிதம்.!
அரசு முன்னெச்சரிக்கையால் பெரும் சேதங்கள் தவிர்ப்பு.. அமைச்சர் பெருமிதம்.!
By : Kathir Webdesk
நிவர் புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலூர், சென்னையில் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பதை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக சாலை மார்க்கமாக பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், நிவர் புயலின் தன்மையை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்ட காரணத்தினால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை, நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தாலும் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருவமழையின்போது கடலில் புயல் உருவாகி அதிகமான காற்று மற்றும் மழை பெய்வது வழக்கம். தற்போது நிவர் புயல் வருவதற்கு முன்பே அதன் தன்மை குறித்து கண்டறிந்து வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமின்றி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையிலும் அதிகளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மனநிறைவை தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.