கறார் காட்டும் உதயநிதி! கடுப்பில் கூட்டணி கட்சிகள்!

கறார் காட்டும் உதயநிதி! கடுப்பில் கூட்டணி கட்சிகள்!

Update: 2021-01-12 22:29 GMT

கூட்டணி பங்கீட்டில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணி கட்சிகளை விட்டுக்கொடுக்கமாட்டார், கூட்டணி கட்சிகளுக்கு போதிய தொகுதி ஒதுக்க இயலாவிடில் "கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க இயலாவிட்டாலும்  இதயத்தில் இடம் உண்டு" என சமயோசிதமாக பேசி கூட்டணி கட்சிகளை தேர்தல் வரை மனம் நோகாது கொண்டு செல்லும் வல்லமை உடையவர். 

ஆனால் அவரது பேரன் உதயநிதியோ இன்னும் தேர்தல் தேதி கூட அறிவிக்கவில்லை ஆனால் கூட்டணி கட்சிகளை புறம்தள்ளும் வகையில் கருத்தை கூறியுள்ளார்.

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்று பேசினார். “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் 50 தொகுதிகளில் பிரசாரம் செய்து முடித்துவிட்டேன். அங்கெல்லாம் தி.மு.க தொண்டர்கள் நிறைய தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது என்றனர். தி.மு.க வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் தி.மு.க அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன்" என்றார்.

மேலும் பேசிய அவர், "தற்போதுள்ள சூழலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். சென்னையில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் இரண்டு தொகுதியிலும் தி.மு.க போட்டியிடும் என நான் உறுதியளிக்கிறேன். தலைவரிடம் அனுமதி பெறாமலேயே இதை கூறுகிறேன். நான் வெறும் ட்ரெயிலர்தான். தி.மு.க தலைவர் வரும்போது அதிமுகவினர் துண்ட காணோம் துணிய காணோம் என ஓடப்போகிறார்கள்” என கர்வமாகவே கூறினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க மீது விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ம.தி.மு.க'வை புறக்கணித்து பேசியதால் அதன் பொதுச்செயலாளர் வைகோ மிகுந்து கோபத்தில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News