புரெவி புயலால் பலத்த சேதம்.. நாளை கடலூரில் ஆய்வு செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

புரெவி புயலால் பலத்த சேதம்.. நாளை கடலூரில் ஆய்வு செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

Update: 2020-12-07 15:05 GMT

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக புயல் எதிரொலி காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. டெல்டா மாவட்டம் முழுவதும் மழைநீரால் தத்தளித்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் நெற்பயிர்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு சாகுபடிக்காக செலவு செய்த வருவாய் கூட கிடைக்காது என்று வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே அடுத்த தடவைக்கான சாகுபடி பணியை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நிவர் புயலால் கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. புயல் பாதித்த அடுத்த நாளே கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு பணியை மேற்கொண்டார். தற்போது புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் நாளை கடலூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்கிறார். ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சேதப்பணிகளை பார்வையிட்டு அங்கு நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.