திருப்பரங்குன்றம் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதம்!! திமுக கூட்டணி எம்பிகள் வெளிநடப்பு!!
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் குறித்த பிரச்சனை நாடாளுமன்றத்தில் விவாதத்தை தொடர இரண்டு அவைகளிலும் திமுகவின் கூட்டணி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்து நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் அதனை அவையில் விவாதிக்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக எம்பிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த விவகாரத்தில் பலர் பிரச்சினையை ஏற்படுத்த நினைப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீங்கள் கூறுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இருந்தாலும் நீதித்துறைக்கு எதிராக உங்களால் பேச முடியாது. எல்லா உறுப்பினர்களும் அவர்கள் விரும்பியதை பேச தொடங்கினால் அவையை இயக்க முடியாது என கூறினார்.
பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றிக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் காவல்துறை மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும், தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்பது குறித்து கண்டனம் தெரிவித்தார். தமிழக காவல்துறை திமுகவிற்கு சாதகமாக இயங்கி வருவதாக தெரிவித்தார்.
பின் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையானது ஜனநாயகமற்றதாக இருப்பதாகவும், பாசிச போக்கு கொண்டதாகவும் உள்ளது என தெரிவித்தார். மேலும் திமுகவின் ஜனநாயக விரோத போக்கை தமிழக பாஜக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ததை வைத்து தெரிய வருகிறது. இந்த அரசாங்கத்தை வெளியேற்றி மாற்றம் செய்வதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என கூறினார்.
இந்த விவாதத்தை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவின் கூட்டணி எம்பிகள் தொடர் முழக்கம் எழுப்பி வெளி நடப்பு செய்தனர்.