தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு கடந்த 10 ஆண்டில் வழங்கிய தொகை ரூ.7 லட்சம் கோடி.. மத்திய நிதியமைச்சர் பதிலடி..

Update: 2024-01-06 04:25 GMT

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலான 17 முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்துடன் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பிரதமரின் கிராமசாலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களால் நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்று கூறினார்.


இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனத்துடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, நடைபெறும் முகாம்களில், மத்திய அரசின் இந்த திட்டங்களில் இதுவரை சேராத மக்கள், அவற்றில் சேர்ந்து பயன்பெறும் வகையில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தொகையினை நிதியமைச்சர் பட்டியலிட்டார். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு 6.8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில்  57 லட்சம் மற்றும் நகரப்புறங்களில் 5.23 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன என்றும், சென்னையில் மட்டும் 6751 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் 6340 பயனாளிகள் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


மாநில அரசின் பங்கு எதுவுமின்றி 3.64 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகவும், சென்னையைப் பொருத்தமட்டில் 25.7 லட்சம் பேர் பயன்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மக்கள் வங்கித் திட்டம் எனப்படும் ஜன் தன் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பேருக்கு இருப்புத் தொகை ஏதுமற்ற வங்கி கணக்குகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 58 சதவீதம் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதமின்றி 2.67 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 5.2 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News